கே,பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் காவல்நிலை யத்தில், வியாபாரிகள் ஜெயராஜ் (62), பென்னிக்ஸ் (31) ஆகியோர் சித்ரவதை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ கத்தையே உலுக்கிக் கொண்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே எந்த குற்ற விசாரணையோ, வழக்குகளோ நிலு வையில் இல்லை.
கடந்த 19.6.2020 அன்று இரவு 8 மணிக்கு செல்போன் கடையிலிருந்து திரு. ஜெயராஜ் அவர்களை காவல்நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரைத் தொடர்ந்து பென்னிக்ஸூம் அவரது நண்பர்களும் காவல்நிலையம் சென்றுள்ளனர். காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த காவலர்கள், அவர்களை இரவு முழுவதும் தாக்கி சித்தரவதை செய்துள்ளனர். இவர்களை அடித்து சித்ரவதை செய்யும் போது, காவல்நிலையத்திலிருந்த மற்றவர்களை எல்லோரையும் வெளியே அனுப்புங்கள், கதவுகளை மூடுங்கள் என உத்தரவிட்டு ஆய்வாளர் ஸ்ரீதர் இவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார். இவர்களை சித்ரவதை செய்துள்ள சம்பவங்களை காவல் நிலையத்தில் வெளியே இருந்தவர்கள் பார்த்துள்ளனர். மேலும் அடி தாங்க முடியாமல் இவர்கள் கதறி அழுத கூக்குரல் அந்த தெரு முழுவதும் கேட்டுள்ளது.
நள்ளிரவுக்கு மேல் இவர்கள் இருவரையும் ஆபத்தான நிலையில் காவல் நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது, இவர்களது நிலையை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இவர்களை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சுமார் மூன்று மணி நேரம் அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இவர்கள் உடல்கள் முழுவதும் காயங்கள் இருந்ததோடு, ஆசன வாய் வழியாக அதிகமான ரத்தம் வெளியேறி உள்ளது. ஜெய ராஜூடைய வேஷ்டி, பென்னிக்ஸூடைய பேண்ட் ரத்தத்தில் நனைந்திருந்த நிலையில் இரண்டு, மூன்று முறை துணிகளை மாற்றியுள்ளனர். அதன் பிறகு, சாத்தான்குளம் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்பு அழைத்துச் சென்று ரிமாண்ட் உத்தரவு பெற்று, கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 22ந் தேதி மாலை தந்தையும், மகனும் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் கொரோனா காலத்திலும் கூட பெரும் கொதிப்பான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த கொடூர மானச் சம்பவத்தை நிகழ்த்திய சாத்தான்குளம் காவல்துறை யைச் சார்ந்த ஒருவர் மீது கூட எந்த வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை. ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேசன், பாலகிருஷ்ணன் உள்பட சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இறந்து ஏறக்குறைய ஒரு வாரம் கடந்த பின்னரும் கூட கோவில்பட்டி காவல்நிலை யத்தில் பதிவு செய்யப்பட்ட 174 பிரிவின் கீழான (சந்தேக மரணம்) முதல் தகவல் அறிக்கை மட்டுமே உள்ளது. வழக்கமாக, காவல்நிலையம் அல்லது சிறைச்சாலையில் மரணம் நிகழும் போது உடனடியாக அதுகுறித்து நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கோவில்பட்டி, நடுவர் எண்.1 நீதிபதி அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் தலையீடு
கணவனையும், மகனையும் பறிகொடுத்த திருமதி செல்வராணி அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவர்களு டைய உடற்கூறு ஆய்வினை, மருத்துவர்கள் குழு அமைத்து மேற்கொள்ள வேண்டுமெனவும், அதை வீடியோபதிவு செய்ய வேண்டுமெனவும் கோரிய அடிப்படையில் மதுரை உயர்நீதி மன்றமும் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டது. உடற்கூறு ஆய்வும் முடிவடைந்து இருவரின் உடலும் சாத்தான்குளத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை சுயமாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மதுரை உயர்நீதிமன்றம், ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருக்கிற கோவில்பட்டி நடுவர் நீதிபதி அவர்கள் என்னென்ன விசாரிக்க வேண்டுமென விரிவாக உத்தரவு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவினால் மக்கள் கொடுந்துயருக்கு ஆளாகியுள்ள நிலையில் கோவில்பட்டியில் நடந்திருக்கிற மிருகத்தனமான நடவடிக்கையை கண்டித்து, தமிழக மக்கள் கொந்தளித்ததைப் போல தமிழக ஆட்சியாளர்களும் கொந்த ளித்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் பலரும் ஒருமித்த கருத்தோடு இதை கொலை வழக்காக மாற்றி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேசன், பாலகிருஷ்ணன் மற்றும் அந்த சம்ப வத்தின் போது பணியிலிருந்த காவலர்கள், இந்த சித்ரவதையில் ஈடுபட்ட, ‘காவல்துறை நண்பர்கள்’ உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென கோரி வருகின்றனர்.
முதல்வர், அமைச்சர் வக்காலத்து
ஆனால் இதற்கு நேர்மாறாக தமிழக முதலமைச்சர் காவல்துறை எழுதி கொடுத்த அறிக்கையை அரசின் அறிக்கையாக பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். இதற்கு மேலும் ஒரு படி மேலே சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறைச்சாலையில் தான் இறந்துள் ளார்கள். எனவே இதை காவல்நிலைய சாவு என்று சொல்ல முடியாது என, குற்றமிழைத்த போலீசாருக்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்கி பேட்டியளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அரசும், காவல்துறை யும் பதில் சொல்ல வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
பொய்யான எப்ஐஆர்
திரு. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் 19ந் தேதி இரவு கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் காவல்துறை யினர் மேற்கண்ட இருவரும வைத்திருந்த செல்போன் கடையை மூடச் சொன்னதாகவும், இவர்கள் முடியாது என எதிர்த்து வாதாடி யதாகவும் திடீரென கீழே விழுந்து தரையில் உருண்டதாகவும் இதனால் அவர்களுக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் இது முழுமையும் உண்மைக்கு மாறானது என நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் அங்கு சென்ற போது ஜெயராஜை அழைத்துப் பேசுவதும், அங்கு எந்த சலசலப்பும் இல்லாமல் ஜெயராஜை காவல்நிலைய வாகனத்தில் ஏற்றிச் செல்வதும், அதனைத் தொடர்ந்து பென்னிக்ஸ் தனது நண்பரு டன் காவல்நிலையம் புறப்பட்டுச் செல்வதும் பதிவாகியுள்ளது. இவற்றை மூடிமறைத்து உண்மைக்கு மாறான ஒரு வழக்கினை காவல்துறையினர் ஏன் பதிவு செய்தார்கள். அதனுடைய உண்மையான நோக்கம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?
வாதத்துக்காக காவல்துறையினரின் எப்.ஐ.ஆர். உண்மை என்று வைத்துக் கொண்டாலும், கீழே விழுந்து உருண்டால் உள்காயங்கள் ஏற்படுமா? அப்படி உள்காயங்கள் ஏற்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத அளவு ரத்தம் வெளியேறும் அளவுக்கு காயங்கள் ஏற்படுமா? அவ்வாறு காயங்கள் ஏற்பட்டது உண்மை என்றால் காவல்துறையினர் இவர்களை உடனடியாக மருத்துவமனைக்குத்தானே அழைத்துச் சென்றிருக்க வேண்டும்? அதற்கு மாறாக, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏறக்குறைய 8 மணி நேரம் அடைத்து வைத்திருந்தது ஏன்?. சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்று மூன்று மணி நேரம் சிகிச்சையளிக்கும் அளவுக்கு அவர்களுக்கு காயங்கள் எப்படி ஏற்பட்டது? காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்த 8 மணி நேரத்தில் இவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் தவிர இந்த காயங்கள் ஏற்படுவதற்கு வேறு என்ன வாய்ப்பிருக்கிறது?
இந்த அளவுக்கு காயங்கள் இருக்கக்கூடிய இவர்கள் இருவரையும், சாத்தான்குளம் அரசு மருத்துவர்கள் ஏன் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கவில்லை? அவர்களை அழைத்துச் சென்று கோவில்பட்டி சிறையில் அடைப்பதற்கு யார் நிர்ப்பந்தம் கொடுத்தது? இந்த இருவரையும் அதிகாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது நீதிபதி இவர்களை நேரில் பார்த்தாரா? கிடைத்த விபரங்களின் படி பார்த்தால் நீதிபதி தனது வீட்டின் முதல்மாடி மேலே இருந்து கொண்டு கீழே இருந்த இவர்க ளை சிறைச்சாலைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்ப ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டுமென விதிமுறைகளை விதித்துள் ளது. அந்த விதிமுறைகளை நீதிபதி ஏன் கடைபிடிக்கவில்லை?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. கே. சந்துரு அவர்கள், இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிபதி முன்னால் நிறுத்தும் போது, நீதிபதி இவர்களை நேரில் பார்த்து உங்களை காவல்நிலையத்தில் யாராவது தாக்கினார்க ளா? உங்கள் உடலில் காயங்கள் இருக்கிறதா? போன்ற கேள்வி களை கேட்டு தெளிவுபடுத்திய பிறகே ரிமாண்ட் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நீதிபதி மேற்கண்ட எதையுமே கேள்வி கேட்காமல் இவர்களை ரிமாண்ட் செய்தது மட்டுமின்றி, காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சாத்தான் குளம் அருகிலேயே தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலை இருக்கும் போது, கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட வேண்டிய காரணம் என்ன?.
கோவில்பட்டி சிறைச்சாலையில் இவர்கள் ஒப்படைக்கப் படும் போது, சிறையில் உள்ள மருத்துவர்கள் இவர்களை சோதனையிட்டு, இவர்கள் உடலில் உள்ள காயங்கள், இவர்க ளது உடல்நிலையை ஆய்வு செய்த பின்னரே சிறைக்குள் அனுமதித்திருக்க வேண்டும். சிறைச்சாலை ஆவணங்களில் இவர்களில் உடலில் இருந்த காயங்கள் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. அப்படியானால் இவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு மாறாக, சிறைச்சாலையில் அடைப்பதற்கு ஏன் ஏற்றுக்கொண்டார்கள்? போன்ற பல கேள்விகள் மூடு மந்திரமாக உள்ளன. ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் சாத்தான் குளம் காவல்நிலைய அதிகாரிகள், சாத்தான் குளத்தில் உள்ள அரசு மருத்துவர்கள், சாத்தன்குளம் நடுவர் நீதிபதி, கோவில் பட்டி சிறைத்துறை அதிகாரிகள் அனைவரும் இச்சம்பவத்தில் தவறிழைத்துள்ளார்கள் என்பது தெளிவு.
இவர்களுக்குள் ஒரு கூட்டணி
இதற்கு முன் கேள்விப்படுகிற சில சம்பவங்களை பார்க்கும் போது, இவர்களுக்குள் ஒரு கூட்டு அணி செயல்படுவது காண முடிகிறது. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னால் இதே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சித்ர வதை செய்யப்பட்டுள்ளனர். அதில் 16 வயது சிறுவனையும் சித்ரவதை செய்துள்ளனர். மகேந்திரன் என்பவர் சித்தரவதை தாங்காமல் அரசு மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரு டைய மனைவியை மிரட்டி உடலை ஒப்படைத்து, வெளியில் சொல்லாமல் அடக்கம் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை இதே கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். ராஜா சிங் என்பவர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்போது பகிரங்கமாக தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள், இந்த கொடூரமான காவல்துறையினருக்கு வக்காலத்து வாங்கு வதும், அதன் மூலம் நடைபெற்ற படுகொலை விசாரணையை நிர்மூலமாக்குவதும் தெளிவாகிறது.
சிபிஐயிடம் ஒப்படைப்பதற்கு முன்னால்....
தற்போது தமிழக முதலமைச்சர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாக மதுரை நீதிமன்றத்தில் அரசின் மூலம் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மை யில் நடைபெற்ற இந்த கொடுமையான சம்பவத்தில் இரண்டு பேரும் மரணமடைந்த இந்த வழக்கை கொலை வழக்காக இன்னும் அரசு பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கடந்த 10 நாட்களாக இத்தகைய பணிகள் எதையுமே செய்யாமல் இப்போது முதலமைச்சர் ஏதோ முழுமையான நியாயம் வழங்குவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த பிரச்சனை யில் தமிழக முதலமைச்சர் ஆற்ற வேண்டிய கடமையை தட்டிக்கழித்துள்ளார் என்பதே முழு உண்மையாகும்.
இப்போதும் நாம் வற்புறுத்துவது எல்லாம், இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுவது மட்டுமின்றி எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றுவதோடு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வது, சாத்தான்குளம் அரசு மருத்துவர், சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர், கோவில்பட்டி சிறைச்சாலையில் பணியிலிருந்த சிறை அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதே முறையானதாகும் என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
தொடரும் சம்பவங்கள்
சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அடுத்தடுத்து நடந்துள்ள சம்பவங்களும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி குமரேசன் என்பவரின் மரணம், எட்டையபுரத்தில் நடந்த கணேசன் அவர்களின் மரணம் ஆகியவைகளும் காவல்துறை யினர் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இது போன்ற மேலும் சில சாவுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
குவியும் புகார்கள்
இது மட்டுமின்றி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மீது தொடர்ந்து பல புகார்கள் மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, உதவி ஆய்வாளர் ரகுகணேசன்,அந்த சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாதாரண மக்களி டையே சாதிய மோதலை தூண்டிவிடுவதும்; ஊருக்கு ஊர் தனக்கு வேண்டிய கையாட்களை வைத்துக் கொண்டு பொது மக்களை மிரட்டி வருவதும்; இதனால் அமைதியான இந்த பகுதியில் வன்முறை, படுகொலைகள் நடந்து வருகின்றன என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூன்று ஊராட்சிமன்ற தலைவர்களும் மற்றும் கிராம முக்கியஸ்தர்களும் கையொப்பமிட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு புகார் அனுப்பியுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவ ரையும் சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனுடைய விளைவே, இவர்கள் தானடித்த மூப்பாக, கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சாத்தான்குளம் காவல்நிலையத்தை ஒரு சித்ரவதைக் கூடமாக மாற்றியுள்ளனர்.
நரவேட்டை ஆடுபவர்களைப் பாதுகாப்பதா?
ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்திய மக்கள் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. 15 பேர் களத்தில் உயிரிழந்தார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிக் குண்டு காயங்களோடு மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்றார்கள். இந்த கொடூரமான அடக்குமுறை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் ஒருவர் மீது கூட தமிழக அரசு குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை. முழுக்க, முழுக்க இந்த நரவேட்டை நடத்திய காவல்துறையினரை பாதுகாப்பதிலேயே அரசு தனது கடமையாக நிறைவேற்றி வந்தது. இச்சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கினை ஏற்றுக் கொண்டு, அதன் மீது சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 16 மாதங்கள் கடந்த பின்னரும் கூட அந்த விசாரணை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
எனவே, தவறிழைக்கும் காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிப்பதற்கு மாறாக, அவர்களை பாதுகாக்க அரசுமேற்கொள்ளும் அணுகுமுறை காவல்துறையில் இருக்கிற சிலர் தொடர்ந்து அக்கிரமங்களில் ஈடுபடுவதற்கு பின்புலமாக அமைந்து விடுகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கடந்த காலங்களில் தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய பல்வேறு அத்துமீறல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள், காவல்நிலைய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், இவைகளை எதிர்த்து பலமிக்க போராட்டங்களை தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதற்கென நீதிமன்றங்களில் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஒவ்வொரு சம்பவத்திலும் கூட ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மாறாக, அக்கிரமம் புரியும் காவல்துறையினருக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளதை இந்த வழக்கு விசார ணைகளின் போது பார்க்க முடிந்துள்ளது.
எனவே, அரசின் அணுகுமுறையில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கும், எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதற்கும், அரசை விமர்சிப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு அலைக்கழிப்பதற்கும் காவல்துறை யினரை ஒரு கருவியாக பயன்படுத்துகிற காரணத்தினால், காவல்துறையில் தவறிழைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகின்றனர். இத்தகைய அணுகுமுறை களையப்பட வேண்டும்.
இன்றைய விசாரணை
மதுரை உயர்நீதிமன்றத்தில் சாத்தான்குளம் வழக்கு விசாரணை 30.6.2020-ந் தேதி (இன்று) நடைபெறவுள்ளது. மதுரை உயர்நீதிமன்றம் கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் நீதிபதி விசாரணையின் அடிப்படையிலும், மேற்கண்ட சம்பவத்தில் நடந்துள்ள அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு இதனை கொலை வழக்காக மாற்றியும், சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டு மென்றும் உத்தரவிடுவதோடு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.